மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கும் முன் நடவடிக்கை எடுங்க: ராமதாஸ்
மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது போல, மின்வாரியப் பணியாளர்களு வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு ஏற்கனவே அறிவித்ததைப் போல, காரணி மடங்கு ஊதியத்தை அதிகரித்து வழங்காவிட்டால், வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90 ஆயிரம் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 4 மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும்' என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும், இது மின்வாரியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் முயற்சியாகும்.
இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மின்வாரிய ஊழியர்களுக்கு, 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதுதான் இயற்கை நீதி ஆகும். இதுதொடர்பாக, மீண்டும் மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய தேவையில்லை.
வரும் 12ம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், 16-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாகவும், அதை காலவரையற்ற போராட்டமாக மாற்றப்போவதாகவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறை தொழிலாளர்களைப் போல, மின்வாரியத் தொழிலாளர்களையும் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளக்கூடாது. எனவே, ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை வரும் 12ம் தேதிக்குள் கையெழுத்திட தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications