ஒரே நேரத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மாற்றம் செய்யப்பட்டு, வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின் ஆணையராக பணியாற்றி வந்த கே.ராஜாராமன் சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை இதுவரை எஸ்.கே.பிரபாகரன் கூடுதலாக கவனித்து வந்தார்.
தொழில்துறை ஆணையர் மற்றும் தொழிற்துறை இயக்குநராக இருந்த ராஜேந்திரகுமார் மாற்றம் செய்யப்பட்டு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா கூடுதலாக கவனித்து வந்தார். அருங்காட்சியகத்துறை இயக்குநராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை கார்த்திகேயன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
சமுகப் பாதுகாப்பு திட்ட ஆணையராக இருந்த பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பொறுப்பையும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா கவனித்து வந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக உள்ள நஜிமுதீன் மாற்றம் செய்யப்பட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.