சசிகலாவை சந்தித்த துணை வேந்தர்களுக்கு ஆளுநர் செக்!
சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: பல்கலைக் கழக துணை வேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவ் கடிதம் அனுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் 11 பேர் கடந்த வாரம் ஒன்று கூடி போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சந்தித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் துணை வேந்தர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களிடம் விளக்கம் கேட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடிதம் அனுப்பியுள்ளார்.