கன்னியாகுமரிக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.. மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் கோரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அமைச்சர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் இது குறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தை சில நாட்களுக்கு முன்பு தாக்கிய ஓகி புயலுக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மத்திய அரசும் தமிழக மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் டெல்லியில் சந்தித்தார்.
அப்போது ஒகி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்தார்.
கன்னியாகுமரிக்கு போதிய நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் கோரிக்கை வைத்துள்ளார்.