ஆளுநரின் தமிழக வருகை திடீர் ரத்து.. பதவி ஏற்க முடியாமல் பெரும் குழப்பத்தில் சசிகலா கோஷ்டி
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், பதவி ஏற்பு விழா திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.

ஓ.பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகளால் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே இன்றே சசிகலா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் இருந்து, பதவியேற்பு விழா எப்போது நடத்தப்படும் என்பது பற்றி உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சசிகலா முதல்வராக பதவி ஏற்றால் தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நீடிக்குமா என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியதாக டெல்லி தகவல் கூறுகின்றன.
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் ஆளுநர் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பும் ஒரு வாரத்தில் வெளியாவதால் சிக்கல் உருவாகலாம் என ஆளுநர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . இதனால் இன்று நடைபெற இருந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதவி ஏற்க முடியாமல் பெரும் குழப்பத்தில் சசிகலா கோஷ்டியினர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications