போக்குவரத்துத் துறையைச் சரி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் : விஜயகாந்த்
போக்குவரத்துத் துறையைச் சரி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சரி செய்ய வேண்டுமானால், 3ம் தேதி நடக்கவுள்ள போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வருகிற 3ம் தேதி போக்குவரத்துத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து துறையின் சார்பாக நாள் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 456 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் 90 லட்சம் கிலோமீட்டர் ஓட்டப்படுகிறது. இதற்கு 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது.
நாள் ஒன்றுக்கு 12 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு வாட் வரியாக 24.99 சதவிகிதம் செலுத்துவதன் மூலம், நாள் ஒன்றுக்கு 3 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 230 ரூபாயும், ஆண்டுக்கு 1148 கோடியே 76 லட்சம் ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
பணிக்கொடை சட்டம் 1972-ன் படி போக்குவரத்து தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் வருடத்திற்கு 15 நாள் ஊதியமாக பணிக்கொடை ஊக்கத்தொகை நிர்வாகம் கொடுக்க வேண்டும்.
சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் எனில், 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, வருடத்திற்கு ரூபாய் 210 கோடி தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து நிர்வாக செலவுக்கு பயன்படுத்துகிறது. தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையின் ஊக்கத்தொகையை நிர்வாகத்தால் கொடுக்க முடியவில்லை.
போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை பணத்தை, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பிரீமியமாக செலுத்தி, அதன் மூலம் தொழிலாளர்கள் ஓய்வு பெரும் அன்றே பணப் பலன்கள் வழங்கப்படும் என்ற உத்தரவை வெளியிட்டால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேதனை சற்று குறையும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications