கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் 11-வது நாளாக எல்லையோடு நிறுத்தம்!!
சத்தியமங்கலம்/ஓசூர்: கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் தொடர்ந்து 11-வது நாளாக மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. கர்நாடகா அரசும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று நீரை திறப்பதாக அறிவித்திருக்கிறது.

ஆனால் தமிழகத்துக்கு நீரை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் வன்முறை வெடித்து தற்போதுதான் லேசாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக லாரிகள், பேருந்துகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த 5-ம் தேதி முதல் ஓசூர் வழியாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 11 நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த 41 கர்நாடகா அரசு பேருந்துகள் நேற்று நள்ளிரவு அம்மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications