தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்
சென்னை: 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மனு அளித்துள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு அளித்துள்ளது. எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார், முதல்வர் பற்றி விமர்சனம் செய்தார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி உருவானது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளி யேற்றப்பட்டனர். அப்போது சபை காவலர்களை தாக்கிய தாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்திபன், சந்திரகுமார், தினகரன், வெங்கடேசன், சேகர் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் நகலை பேரவைச் செயலகத்தில் செயலரின் அலுவலகத்தில் 6 பேரும் திங்கள்கிழமை அளித்தனர். செயலர் டெல்லி சென்றிருப்பதாக அவரது உதவியாளர் கூறினார். இதையடுத்து, உதவியாளரிடம் மனுவை அளித்து, ஒப்புகைச் சீட்டையும் பெற்றனர்.
இதனிடையே தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வக்கீல் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.
அதில் சட்டசபை நிகழ்வுகளை நீதிமன்றம் எப்படி மறு ஆய்வு செய்யமுடியும். எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யபட்டதன் பின்னணியை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை.என கூறப்பட்டு உள்ளது.
எனவே, அவர்கள் இன்று சட்டசபையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.