பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளைத் தத்தெடுக்க ஆர்வமாக இருக்கிறீர்களா?.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
சென்னை: பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளைத் தத்தெடுக்க ஆர்வம் உள்ளவர்களுக்காக தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற குழந்தைகள் இல்லங்களில் உள்ள தத்துகொடுப்பதற்கு இயலாத நிலையில் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறியப்பட்டு, இக்குழந்தைகள் குடும்பச் சூழலில் வளர்ப்பதற்கு வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுகிறது.
வளர்ப்பு - பராமரிப்பு பெற்றோர் என்பவர் சொந்த குழந்தைகள் உள்ளோர் அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் ஒருவரும் தங்களது பராமரிப்பிற்கு கொண்டு சென்று பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம்.
சமுதாயத்தில் உள்ள குழந்தைகளில் பெற்றோர்களால் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் அல்லது பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகளை வளர்ப்பு - பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் நேரடியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் நலக் குழுதலைவர், உறுப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அணுகலாம்.
வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வளர்ப்பு - பராமரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்க வழிவகை உள்ளது. இந்த வளர்ப்பு - பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு - பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். விண்ணப்பம், நிபந்தனைகள், நடைமுறைகளை பெற்றோர்கள், அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தை காப்பகங்கள் இளைஞர் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2015-ன் பிரிவு 41-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். தவறினால் பிரிவு 42-ன் கீழ் ஓராண்டு வரையில் சிறை தண்டனையோ, ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறையாத அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். விவரங்களுக்கு சமூக பாதுகாப்புத்துறை இயக்குனரை அணுகவும். அதற்கான எண்கள் 044-26427022, 26426421 ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications