தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு திடீர் உத்தரவு
நெல்லை: தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மதுபான விற்பனையை தமிழக அரசே 2003ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தி வருகிறது. இதற்காக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் 6500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 2005ல் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்த நிலையில் தற்போது ரூ.25 ஆயிரம் கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த நிதி மூலம் தான் அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி கோரி நாகர்கோவிலில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது. சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தினால்தான் தமிழகத்திலும் அமுல்படுத்த முடியும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 250 மீட்டர் வரை உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 500 கடைகள் மூடப்படும். இது தேர்தலை கருத்தில் கொண்டே பிறப்பிக்கப்பட்ட உத்தரவாக பலர் கருதுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications