தமிழகத்தில் பொம்மை ஆட்சி போய், பினாமி ஆட்சி போய் இரட்டை ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின்
தஞ்சாவூர்: தமிழகத்தில் பொம்மை ஆட்சி போய், பினாமி ஆட்சியும் போய் தற்போது இரட்டை ஆட்சி நடக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை புது ஆற்றுப்பாலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ''இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை ஒட்டு மொத்தமாக நாம் பார்த்தால், வருகின்ற 2016ல் தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான்.
கல்லூரி மாணவ-மாணவிகளை நான் சந்தித்து பேசியபோது அவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் எங்களையும் அழையுங்கள், தி.மு.க.வோடு இணைந்து போராட நாங்களும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறியதைப்போல் இனி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்கு கட்சிப்பணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
கட்சி பணிகள் செய்பவர்களுக்கு பதவிகள் கொடுக்காவிட்டாலும் அவர்களை தட்டி கொடுக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு மூலம் நான் தெரிந்து கொண்டேன்.
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோர், நடுத்தர மக்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு எதிரான வழியில் செயல்படும் ஆட்சிக்கு வருகிற 2016 தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
2016ல் தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்காக இப்போதே நாம் சபதம் ஏற்போம்" என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications