கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.. மத்தியில் கோலோச்சிய தமிழக அமைச்சர்கள் இன்று வெறும் 1தான்!
சென்னை: கடந்த 2004ம் ஆண்டு முதல் தமிழகத்திலிருந்து மத்தியில் அமைச்சர்கள் ஆவோரின் எண்ணிக்கை அமோகமாகவே இருந்தது. ஆனால் இன்று வெறும் ஒரே ஒருவர்தான் அமைச்சராகிறார்.
மத்தியில் 2004 முதல் 2014 வரை கூட்டணி ஆட்சியே பொறுப்பில் இருந்ததால் மிரட்டியும், உருட்டியும், கெஞ்சியும் நிறைய அமைச்சர்களை கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக திமுக வாங்கி வந்தது.
ஆனால் இன்று நிலைமை மாறிப் போய் விட்டது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டதால் அதுவாக பார்த்து ஏதாவது கொடுத்தாலதான் என்ற நிலை வந்துள்ளது.
மேலும் இதற்கு முன்பு மத்தியில் அமைச்சர்களாக வந்த திமுகவினர் சொல்லிக் கொள்ளும்படி செய்துள்ளனர். ஆனால் இனிமேல் அப்படிப்பட்ட நிலையை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிகிறது.

2004ல் 12 பேர்
2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது 12 பேருக்கு தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.

6 பேருக்கு கேபினட் பொறுப்பு
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைத்தது.

6 பேருக்கு இணை அமைச்சர் பதவி
அதேபோல திமுகவைச் சேர்ந்த பழனி மாணிக்கம், ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருக்கும், காங்கிரஸைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், பாமகவைச் சேர்ந்த ஆர். வேலுவுக்கும் இணை அமைச்சர் பதவி கிடைத்தது.

முக்கியத் துறைகள்
இந்த 12 பேருக்குமே நல்ல நல்ல துறைகளும் கிடைத்தன. தொலைத் தொடர்பு, கப்பல் நெடுஞ்சாலை, நிதித்துறை, ரயில்வே, சுகாதாரம் என முக்கியத் துறைகள் இவர்களுக்குக் கிடைத்தன.

2009ல் 10 பேருக்கு
2009ம் ஆண்டு 10 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. இதில் ஒரு சீட் புதுச்சேரி நாராயணசாமிக்குப் போனது.

கேபினெட்டில் 5 பேர்
இந்த முறை கேபினட் அமைச்சர் பதவி 5 பேருக்குத்தான் கிடைத்தது. காங்கிரஸிலிருந்து ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அமைச்சர்களானார்கள். திமுகவிலிருந்து தயாநிதி மாறன், ராசா, மு.க.அழகிரி ஆகியோருக்கு சீட் கிடைத்தது.

5 பேருக்கு இணை அமைச்சர்கள்
அதேபோல நாராயணசாமி, பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்தது.

பாதியில் விலகிய திமுக அமைச்சர்கள்
இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதன் பின்னர் கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் மற்ற திமுக அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இப்போது ஒரே ஒரு அமைச்சர்தான்
இந்த நிலையில் தற்போது மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசில் மத்திய அமைச்சராக தமிழகத்திலிருந்து பாஜகவைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே இணைகிறார். இன்னொருவரான நிர்மலா சீதாராமன் தமிழராக இருந்தாலும் கூட அவர் ஆந்திராவில்தான் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளதால் அவரைக் கணக்கில் கொள்ள முடியாது.
ஒருவேளை தேமுதிக சுதீஷ், பாமக அன்புமணி ஆகியோர் இணைந்தால் அமைச்சர்கள் எண்ணிக்கை 3 ஆக உயரலாம்.. அதற்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் இந்த முறை தமிழகத்திற்கான மத்திய அமைச்சர்கள் ரொம்பவே கம்மியாகி விட்டது என்னவோ உண்மைதான்.












Click it and Unblock the Notifications