நம்பியார், அசோகன் போல சேகர் ரெட்டியுடன் போஸ் கொடுத்த ஓபிஎஸ்- சி.வி.சண்முகம் காட்டம்
மணல் மாஃபியா சேகர்ரெட்டியுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் அது குறித்து விளக்கம் அளிப்பாரா என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சட்ட விரோதமாக பணம் சேர்த்த வழக்கில் சிறையில் உள்ள சேகர்ரெட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறித்து ஓ.பன்னீரசெல்வம் விளக்கம் அளிப்பாரா என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவரிடம் இருந்து ரூ.140 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில் சேகர் ரெட்டி தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மணல் குவாரிகளை நடத்தி வந்த சேகர் ரெட்டி, அதில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. இது தொடர்பாக அரசில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது. இதற்கிடையே சேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்திய போது, டைரி ஒன்றும் சிக்கியது.
அதில் மணல் குவாரி தொழில் பற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணபரிமாற்றம் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. வருமானவரி துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதால் முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கயிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதே சேகர் ரெட்டிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில்இருந்த போது சேகர் ரெட்டியை அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான தலைவராக நியமிக்க உதவியதும் ஓ.பன்னீர்செல்வமே என குற்றஞ்சாட்டிய அமைச்சர், மேலும் எவனே குப்பன்சுப்பன் எழுதுனத வெச்சு நடவடிக்கை எடுக்க சொல்பவர்கள், நம்பியார் அசோகன் போல ஓ.பன்னீர்செல்வமும், சேகர் ரெட்டியும் புகைப்படம் எடுத்தது பற்ற சொல்வார்களா என்று எரிந்து விழுந்தார்.