இந்த மழைக்காலத்தில் ஒரு கவுன்சிலரும் இருக்க மாட்டார்..!
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் வரவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உரிய காலத்திற்குள் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் நாளையுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் 12 மாநகராட்சிகளின் மேயர்கள் உள்பட அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்களும், பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களும் பொறுப்புகளை தம் வசம் கொண்டு வருவர். தேர்தல் நடத்தப்படும் வரை இவர்களே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பார்கள்.
தமிழகத்தில் மழைக்காலம் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை உள்ளிட்ட பகுதிகள் சந்தித்தன. அப்போது உள்ளாட்சிப் பிரதிகள் பொறுப்பில் இருந்தும் கூட மக்களுக்கு சரிவர உதவவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மழைக்காலம் வருவதால் மக்களிடையே பெரும் கவலையும் அச்சமும் தோன்றியுள்ளது.
இந்த மழைக்காலத்தில் அதிகாரிகளே முழுக்க முழுக்கப் பொறுப்பில் இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. முதல்வரும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதும் மக்களிடையே கவலையை இரட்டிப்பாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications