எங்களைப் பார்த்ததும் நடிக்காதீங்க- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
செஞ்சி: ஆய்வுக்காக சென்ற தங்களைப் பார்த்துவிட்டு வேலை செய்வதாக நடிக்காதீர்கள் என்று ரேஷன் கடை ஊழியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் அப்பகுதியில் நந்தன் கால்வாய் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அவ்வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென்று நியாய விலை கடைக்குள் உள்ளே சென்றார். அங்குஅரிசி, சர்க்கரை வழங்கும் எடைத்தட்டை ஆய்வு மேற்கொண்டு, முறையாக பராமரிக்காத எடைத்தட்டை மாற்ற வேண்டும் என கூறினார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சக்கரை, எடைத்தட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சருக்காக நீங்கள் சும்மா நடிக்க வேண்டாம் என விற்பனையாளிடம் எச்சரித்தார். பராமரிக்காத எடைத்தட்டை உடனடியாக அகற்றி, புதிய எடைத்தட்டை மாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர், திடீரென்று நியாய விலை கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கிருந்த ஊழியர்களையும் எச்சரித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.