தமிழக எம்எல்ஏக்களும் கூண்டோடு விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி தருவார்களா?
காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழக எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த மக்கள் கோருகின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் ஊஞ்சலாடுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காது என்பது சித்தராமையாவின் எதிர்ப்பில் இருந்தே தெரிகிறது. இதனால் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று புகார் கிளம்பியுள்ளது. ஒரு மாநிலத்தின் தேர்தலுக்காக மற்ற மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதா என்ற வேதனை மக்களிடையே எழுந்துள்ளது.

சட்ட நெருக்கடி
தமிழகத்தில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் நீங்கலாக மொத்தம் 216 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மக்கள் நலனுக்காக ராஜினாமா செய்து அரசியல் ரீதியில் சட்ட நெருக்கடியை மத்திய அரசுக்கு உண்டாக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செவிசாய்க்கும்
இவ்வாறு எம்எல்ஏக்கள் பதவி விலகினால் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வரும் அல்லது தேர்தல் வரும். தேர்தல் வந்தால் அத்தனை கட்சிகளும் அதை புறக்கணிக்க வேண்டும். ஆளுநர் ஆட்சி வந்தால் அது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாகவே இருக்கும். தமிழகத்தின் நியாயத்தை மத்திய அரசு நிலை நாட்டியாக வேண்டிய நெருக்கடியும் ஏற்படும்.

அடுத்த தேர்தலில்
எனவே தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட எம்எல்ஏக்கள் விருப்பு வெறுப்பின்றி கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். பதவி முக்கியமல்ல, மக்கள் நலன்தான் முக்கியம் என்று கருதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும்.

அனைவரின் எதிர்பார்ப்பு
எனவே எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் ஒன்றிணைந்து இதிலாவது உறுதியாக, தீவிரமாக, செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசை பணிய வைக்க இதுதான் ஒரே வழி என்பதும் மக்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications