அடுத்த பஞ்சாயத்து ரெடி.... தமிழகத்தின் தலைநகரை மையப்பகுதியில் உருவாக்க கோரிக்கை
திருச்சி: தமிழகத்தின் தலைநகரை மையப்பகுதியில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ளது "தமிழ்நாடு புதிய தலைநகர் மக்கள் இயக்கம்".
தமிழகத்தை 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்; தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது அவ்வப்போது எழும் கோரிக்கைகள். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது "தலைநகரை மாற்றுங்க" என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.
திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு புதிய தலைநகர் மக்கள் இயக்க பொதுச்செயலர் ஜவஹர் ஆறுமுகம் நேற்று கூறியதாவது:
புயல், சுனாமி, பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஆபத்துக்கள், சென்னைக்கு அதிகம் உள்ளது. ஆகையால் இத்தகைய ஆபத்துகள் இல்லாத பகுதியில்தான் தலைநகரை அமைக்க வேண்டும்.
திருச்சியில் புதிய தலைநகரை அமைப்பதிலும் சிக்கல் உள்ளது. ஆகையால் மாநிலத்தின் மையமான பகுதியில் தலைநகரை அமைக்க வேண்டும். அப்போது அனைத்து பகுதிகளிலும் சரி சமமான வளர்ச்சியை எட்ட முடியும்.
இதற்காக சென்னையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளோம்.
இவ்வாறு ஜவஹர் ஆறுமுகம் கூறினார்.
விஸ்வரூபமெடுக்குமா?