சென்னையில் செப். 26 தமிழர் எழுச்சிப் பேரணி- 150 தமிழ் அமைப்புகள் பங்கேற்பு: தி.வேல்முருகன்!
மதுரை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்ற அனுமதித்ததைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 26-ல் நடைபெறும் தமிழர் எழுச்சிப் பேரணியில் 150 அமைப்புகள் பங்கேற்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

சென்னையில் கடந்த 6-ந் தேதி அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என 150 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுக்கும் மகிந்த ராஜபக்சேவை ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற அனுமதித்ததையும் அதைத் தடுக்காத மத்திய அரசையும் கண்டித்தும் சென்னையில் செப்டம்பர் 26-ந் தேதி மாபெரும் தமிழர் எழுச்சிப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் இந்தப் பேரணியில் 150 அமைப்புகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications