மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது?: ரூ.6,805 கோடி அளவுக்கு உயர்த்த மின் வாரியம் திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

வீட்டு மின் உபயோகக் கட்டணம்
தாழ்வழுத்த கட்டண விகிதத்தைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகதாரர்கள் (இரண்டு மாதங்களுக்கு) 100 யூனிட் வரை 40 காசுகள், 200 யூனிட் வரை 45 காசுகள், 500 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு 200 யூனிட் வரை 50 காசுகள், மீதமுள்ள 300 யூனிட்களுக்கு 60 காசுகள், 500 யூனிட்டுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு, 500 யூனிட்களுக்கு மேல் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 85 காசுகள் உயர்த்தப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்
தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு ரூபாய், பொது வழிபாட்டுத் தலங்கள் 75 காசுகள், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை 50 காசுகள், அதற்கு மேல் 60 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.

விசைத்தறிகள், கடைகள்
விசைத்தறிகள் இரண்டு மாதத்துக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், 500 யூனிட்டுக்கு மேலானோருக்கு 500 யூனிட் வரை 70 காசுகள், அதற்கு மேல் 75 காசுகள், வணிக (கடைகள்) இணைப்புதாரருக்கு 100 யூனிட் வரை 65 காசுகள், அதற்கு மேல் ஒரு ரூபாய் ஐந்து காசுகள் உயர்த்தப்பட உள்ளது.

தற்காலிக மின் இணைப்பு
தற்காலிக மின் இணைப்பு மற்றும் ஆடம்பரச் செலவு இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்த்தப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 75 காசுகள் உயர்த்தப்படுகின்றன.

உயர் அழுத்தக் கட்டணம்
உயர் அழுத்தக் கட்டண விகிதத்தில், தொழிற்சாலைகள், ரயில்வே, தனியார் கல்வி நிறுவன இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் 72 காசுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இரண்டு ரூபாய் 72 காசுகள், வணிகத்துக்கு ஒரு ரூபாய் ஐந்து காசுகள், தற்காலிக விநியோகத்துக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் மற்றும் விவசாய பம்புசெட்களுக்கு மூன்று ரூபாய் 72 காசுகள் உயர்த்தப்படுகின்றன.

விவசாயிகளுக்கு மானியம்
இதில் விவசாய பம்புசெட்களுக்கான கட்டணம் முழுமையும் அரசே மானியமாக செலுத்தும். இந்த மனு குறித்து அனைத்து விதமான நுகர்வோரும் தங்கள் கருத்துக்களை கடிதங்கள், மனுக்கள் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வரும் அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பாக தெரிவிக்கலாம்.

கருத்து கேட்புக் கூட்டம்
கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்கூட்டியே கடிதங்கள் மூலம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தெரிவித்தால், பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு நேரில் பேச அழைக்கப்படுவர் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு 2011ஆம் மீண்டும் பதவிக்கு வந்த உடன் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் நுகர்வோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications