அத்திக்கடவு - அவினாசி திட்டம்.. ரூ. 3523 கோடியில்.. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்
சென்னை: அத்திக்கடவு - அவினாசி பாசனத் திட்டம் ரூ. 3523 கோடி மதிப்பட்டில் நிறைவேற்றப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதைக் கொண்டு வந்து அவர் பேசுகையில்,

அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றினால் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பெரியளவு பயன்பெறும். பவானி ஆற்றில் இருந்து வருடம் தோறும் 30 டி.எம்.சி. தண்ணீர் பில்லூர் சென்று கடலில் கலக்கிறது. இதை தடுத்து நீர் பாசன திட்டத்துக்கு பயன்படுத்தினால் பொதுப்பணி துறைக்குரிய 31 ஏரிகளும், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 குளங்களும், 538 குட்டைகளும் நிரம்பும். இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது அரசு இந்த திட்டத்துக்காக ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதி எந்த அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றார் ஸ்டாலின்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அத்திக்கடவு- அவினாசி திட்டம் 2011-12-ல் ரூ.1,862 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக இது அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதை நீர்பாசன திட்டமாக மாற்றி அனுப்பும்படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து மத்திய நீர்குழுமத்துக்கு 2016-17-ம் ஆண்டு நிதியாண்டில் நீர் பாசன திட்டமாக மாற்றி அனுப்பப்பட்டது. இதற்கான அனுமதி கிடைத்து உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 1,697 ஏக்கர் பட்டா நிலம், 28 ஏக்கர் வனத்துறை நிலம், தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்துவதற்கு ரூ.3.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய திட்டத்தின் மதிப்பீடு ரூ.3,523 கோடி. தற்போது வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications