விடிய விடிய கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை- தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநிலக்கல்லூரி, அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 20 நாட்கள் மழை கொட்டியது. பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது மழை வெள்ளம். நான்கு நாட்கள் நன்றாக வெயிலடித்த நிலையில் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் ,அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல மழை தொடங்கியுள்ளது.
விட்டு விட்டு மழை
சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
கடந்த முறை பெய்த மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெற இருந்தன. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தாண்டவன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைத் தேர்வுகள்
மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்
அலுவலகம் செல்வோர் தவிப்பு
அதிகாலையில் இருந்து கனமழை கொட்டி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் அலுவலகத்தில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரினால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.