கர்நாடகத்திற்கு எதிராக தமிழக மக்கள் திரண்டெழ வேண்டும்.. வைகோ அழைப்பு
தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க தமிழக மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சை சீனிவாசபுரத்தில் நடந்த விழாவில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் சங்கமித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க. மூத்ததலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதில் கலந்து கொண்டார். அவரும். இளங்கோவனும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், கர்நாடகா அரசு மேகதாது மற்றும் ராசிமணல் பகுதிகளில் 2 புதிய அணைகள் கட்டதிட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி கர்நாடக அரசு 2 அணை மட்டும் அல்ல. மேலும் 5 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது.
இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது. இது அரசியல் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரச்சனை. கர்நாடகத்தில் பல்வேறு அணைகள் கட்டிய போது அதனை தடுக்க தமிழகம் தவறி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமை உணர்வுடன் திரண்டு வந்து ஒன்றாக போராட வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை விட காவிரி நீர் பிரச்சினை 100 மடங்கு ஆபத்தானது. இந்த காவிரி நீர் பிரச்சினையால் 12 மாவட்டங்கள் பாதிக்கும். மக்களின் குடிநீர் பாதிப்படையும். 3 கோடி விவசாய மக்கள் பாதிப்படைவார்கள். 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது.
மீத்தேன் திட்டம் இன்னொரு பேராபத்து என்றாலும் அதனை மக்கள் திரண்டு போராடி தடுக்க முடியும். காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதில் அப்படி அல்ல. இதனால் தமிழகத்தில் பட்டினி கிடந்து அழிய வேண்டிய நிலை வரும். இதை விட ஆபத்து தமிழகத்துக்கு எப்போதும் நேராது. எனவே தமிழக மக்கள் திரண்டு வந்து போராட வேண்டும். இல்லாவிட்டால் நமது வருங்கால சந்ததி பெரும் அழிவை சந்திக்கும்.
ஈ.வி.கே.சம்பத் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடினார். அவர் அப்போதைய பிரதமர் நேருவை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கட்டும் இடையில் இந்தி மொழியை இணைக்க கூடாது என கூறினார். இதையடுத்து நேரு இந்தி மொழியை தமிழகத்தில் இணைப்பு மொழியாக்க் கூடாது என உத்தரவிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 70 சதவீதம் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதேபோல் இந்திய குடியரசு தலைவர் பிராணப்முகர்ஜி இந்தி சமஸ்கிருதம் மூத்த மொழி என்று கூறியுள்ளார். தமிழகத்தில் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications