வாலிபால் விளையாட இலங்கை சென்ற தமிழக வீரர்கள்: பயிற்சியாளர் உட்பட இருவர் 'சஸ்பென்ட்'

ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றது. இதில் இடம் பெற்றிருந்ததால் தமிழக வீரர்கள் இருவரும் இலங்கை சென்றனர்.
சென்னை லயோலா கல்லுாரியில் படிக்கும் இருவரும் நேரு விளையாட்டரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குஜராத், ராஜஸ்தான் ஆகிய பயிற்சி முகாம்களில் பங்கேற்றனர். அப்போது, இவர்கள் திறமையை பார்த்த இந்திய வாலிபால் பேரமைப்பு, இலங்கையில் நடக்கும் இளையோர் வாலிபால் போட்டிக்கு தேர்வு செய்தது.
இதையடுத்தே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், இங்கிருந்து வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், தமிழக அரசுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வாலிபால் பயிற்சியாளர், விடுதி மேலாளர் ஆகிய இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும் நேரு விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு வாலிபால் சங்க அலுவலக்த்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே இலங்கை சென்ற, அந்த இரண்டு மாணவர்களும் நேற்று சென்னை திரும்பினர். இவர்கள் இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, உறுப்பினர் செயலரை சந்தித்து, தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications