முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வேலையை துவங்கிய தமிழக அரசு
தேனி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வேலையை தமிழக அரசு இன்று துவங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று கூறி கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை பணிமனை ஆய்வாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சென்னையில் இருந்து முல்லைப் பெரியாறு அணை இருக்கும் பகுதிக்கு சென்றது.

அந்த குழு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து திங்கட்கிழமை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேறும் 13 ஷட்டர்களை மனித ஆற்றலால் இயக்குவது, மேலும் மோட்டார்களால் இயக்குவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஷட்டர்களுக்கு கிரீஸ் போட்டு அதை மேலும், கீழும் இறக்கிப் பார்த்தனர். இந்த ஷட்டர் சீரமைப்பு பணி முடிய ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது ஆபத்து என்று கேரளா தொடர்ந்து கூறி வந்த நிலையில் அணை வலுவாக உள்ளது அதனால் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications