நீட்: தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு- மத்திய அரசிடம் இன்று தாக்கல்
டெல்லி: மருத்துவ மாணவர் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டத்தின் வரைவு இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இத்தேர்வு நடைபெற்றது.
இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

அரசாணை ரத்து
ஆனால் இந்த அரசாணை செல்லாது என ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அதேநேரத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

2 ஆண்டு விலக்கு கோரும் சட்டம்
இதனடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆண்டுகள் விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இம்மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

பதிலே இல்லை
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடியார், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் டெல்லியில் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்காமல் இருந்து வந்தது.

மத்திய அரசு ஒத்துழைப்பு
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிராமப்புற மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு கோரினால் மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.

இன்று தாக்கல்
டெல்லியில் மத்திய அரசிடம் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவை இன்று கொடுக்கின்றனர். இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதலும் இன்றே பெறப்படும் என தெரிகிறது. இதையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசகர் ராவ் பிறப்பிப்பார்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்..
இந்த அவசர சட்டம் அமலானதும் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக தொடங்கப்படும். இம்மாதத்துக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications