அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினைன்னா.. இவங்களுக்கு மட்டும் அய்யாயிரம் பிரச்சினை சாமி!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் தத்தமது கட்சியினரிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன. ஆனால் அதை வாங்குவதிலேயே பிரச்சினையைச் சந்தித்து வருகிறதாம் காங்கிரஸ் கட்சி.
என்ன கொடுமை என்றால் கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டி சார்பிலும் விருப்ப மனு வாங்க ஆட்களைப் போட்டுள்ளனராம். அதில் இளங்கோவன் கோஷ்டி சார்பில் நியமிக்கப்பட்ட நபர் மட்டுமே விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறாராம். மற்றவர்கள் வரவே இல்லையாம்.
இதனால் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களின் விருப்ப மனுக்கள் மட்டுமே பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் மேலிடத்தைக் கடுப்பாக்கியுள்ளதாம்.

எல்லாமே குழப்பம்தான்
காங்கிரஸ் என்றால் ஆங்கிலத்தில் கூட்டம் என்று பொருள் வரும். ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ குழப்பம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. எதை எடுத்தாலும் குழப்பம்தான் இக்கட்சியில்.

234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு
தற்போது சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வாங்க ஆரம்பித்துள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி.

ஆளுக்கு 10 மாவட்டம்
எல்லாக் கட்சியிலும் மொத்தமாக மனுக்களைப் பெறுவார்கள். ஆனால் இது காங்கிரஸாச்சே. எனவே கோஷ்டி வாரியாக மனுக்களைப் பெற ஏற்பாடு செய்துள்ளனர்.

மண்டலங்களாகப் பிரித்து
ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களுக்கும் தத்தமது கோஷ்டியினருக்கு சீட் கிடைக்க வகை செய்யும் விதத்தில் மண்டலங்களாக மாவட்டங்களைப் பிரித்து மனு பெற்று வருகிறார்கள்.

இளங்கோவன் கோஷ்டி மட்டும்
இதில் இளங்கோவன், தங்கபாலு, ப.சிதம்பரம், கே.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகிய கோஷ்டித் தலைவர்களின் சார்பில் பிரதிநிதிகளையும் விருப்ப மனு பெற போட்டிருந்தனர். ஆனால் இளங்கோவன் கோஷ்டி மட்டுமே தற்பேது மனுக்களைப் பெற்று வருகிறதாம்.

விருப்ப மனுவா.. இல்லை வெறுப்பு மனுவா
ஏன் மற்றவர்கள் வரவில்லை என்று கேட்டால், விருப்ப மனு பெறும் அறிவிப்பு முறைப்படி இளங்கோவனால் வெளியிடப்படவில்லை. செய்தி தொடர்பாளர்தான் வெளியிட்டுள்ளார். அகில இந்திய தலைமையில் இருந்து முறைப்படியான அறிவிப்பு வெளியாகவில்லை. அவ்வாறு இல்லாமல் வசூலிக்கப்படும் பணத்துக்கு யார் பொறுப்பு? விருப்ப மனு தாக்கல் செய்த தொகுதி நமக்கு கிடைக்காமல் போனால் பணம் திரும்ப கிடைக்குமா? 234 தொகுதிக்கும் பணம் வசூலிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது செல்லாது என்று கூறுகிறார்கள்.

கோபண்ணாவின் அறிக்கை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் பிப்ரவரி 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கலாம் என்று அறிவித்து இருந்தோம். இந்த அறிவிப்பின்படி நூற்றுக்கணக்கானோர் முதல் நாளிலேயே விருப்ப மனுவை வழங்கி இருக்கிறார்கள்.

வராமல் இருந்தால் எப்படி
இந்நிலையில் விருப்ப மனுவை பெறுவது அகில இந்திய தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், புறக்கணிப்பதாக சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும்.

ஒப்புதல் வாங்கியாச்சு
பிப்ரவரி 6ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சந்தித்த போது விருப்ப மனு பெறுவதற்கு பிப்ரவரி 10ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கியதை விமர்சித்து பேசி வருவதை எவரும் அனுமதிக்க முடியாது.

பொறுக்க முடியாது
தேர்தலை ஒரு சில மாதங்களில் சந்திக்க இருக்கின்ற நேரத்தில் கட்சியை பலகீனப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
நல்ல கட்சி.. நல்ல தலைவர்கள்.. இவர்களையும் நம்பி சிலர்...!












Click it and Unblock the Notifications