சரி தீர்ப்பு வந்துருச்சு... என்ன செய்ய? கர்நாடகாவின் குரலில் பேசி ஷாக் கொடுக்கும் தமிழக காங். தலைவர்
கர்நாடகாவின் குரலில் பேசி காவிரி விவகாரத்தில் அதிர்ச்சி தருகின்றனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
Recommended Video
சென்னை: காவிரி நதிநீர் தீர்ப்பு விவகாரத்தில் கர்நாடகாவின் குரலிலேயே பேசி அதிர்ச்சி அடைய வைக்கின்றனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.
காவிரி தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, தற்போதைய தீர்ப்பு என அடுத்தடுத்து காவிரியில் தமிழகத்தின் உரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது.
காவிரி டெல்டா இனி என்னவாகுமோ? என பதறிப் போயுள்ளது தமிழகம். அப்படியே 15 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு தவிக்கிறது தமிழகம்.
ஆனால் காவிரி தீர்ப்புக்கு கருத்து தெரிவிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசாராகட்டும், கே.எஸ். அழகிரியாகட்டும், தமிழகத்தின் அளவு குறைத்தது தப்புதான்.. வருத்தம் என்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. சரிங்க தீர்ப்பு வந்துருச்சு என்ன செய்ய என ஏற்றுக் கொள்வோம் என்றே பேசுவதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
கர்நாடகாவில் எங்கள் அரசுதான் உள்ளது; நிச்சயம் 177.25 டிஎம்சி நீரை நாங்கள் போராடி பெற்றுத் தந்தே தீருவோம் என முழங்குகிற திராணி, காவிரி நீரை பெற்றுத்தருகிற துணிச்சல் இந்த காங்கிரஸுக்கு கிடையாது. அதனால்தான் தமிழகத்தில் காயலான் கடை பொருள் போல காலவதியாகிக் கிடக்கிறது.
பாஜகவைப் போலவும் கர்நாடகாவைப் போலவும் தமிழகத்தில் தொடர்ந்து காங்கிரஸ் பேசிவந்தால் கொஞ்ச நஞ்ச கிளைகளும் துடைத்து தூரப்போடும் நாளும் தொலைவில் இல்லை என்பதை காங்கிரசார் புரிந்து கொள்ளட்டும்!