இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்தவர் வாழப்பாடியார்.. இளங்கோவன் புகழாரம்!
சென்னை: பலவீனமாகிக் கிடந்த காங்கிரஸ் கட்சியை ஒரு காலத்தில் தூக்கி நிறுத்தி இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்துக் காட்டியவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி. அவர் வழியில் மீண்டும் காங்கிரஸை வலிமைமிக்கதாக ஆக்குவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காவிரிப் பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தவருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் 75 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கும், அபிராமபுரத்தில் உள்ள அவரது சிலைக்கும் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு காலத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோது அதை தூக்கி நிறுத்தி இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்துக் காட்டியவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவர் வழியில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரசை வலிமைமிக்கதாக ஆக்குவோம். அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது பற்றி திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது யாருக்கும் ஆதரவு தெரிவிப்பதா என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மதவாத கட்சியான பா.ஜனதாவை முறியடித்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றார் அவர்.
நிகழ்ச்சியில் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, விஜயதாரணி எம்.எல்.ஏ., வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications