ஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் ஆண்டிபட்டியா? அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
சென்னை: நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெளியூர்காரர் என அதிமுகவினர் தொடர்ந்த மலிவான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை திசைதிருப்புவதற்கு இதுபோன்று அதிமுகவினர் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சுயநலம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத் தேர்தல் வருவதற்கு காரணமே காங்கிரசின் சுயநலம் தான் என்று பேசியிருக்கிறார். அ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க.வின் சுயநலம் தான் காரணமாகும். இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

நியாயம் வேண்டும்
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் போடிநாயக்கனூர், பர்கூர், காங்கயம், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா அந்தந்த ஊரைச் சேர்ந்தவரா ? அங்கு போட்டியிடுகிற போது அவர் உள்ளூர்க்காரரா ? வெளியூர்க்காரரா ? ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸ் வேட்பாளருக்கு பொருந்தாதா ?

திசைதிருப்பாதீர்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்காக எச். வசந்தகுமார் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியில் நிறுத்தப்பட்டார். 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஒரு மிகப்பெரிய லட்சிய நோக்கத்திற்காக அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டதே தவிர, இதற்கு வேறு விதமான காரணங்கள் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டு, திசைதிருப்புகிற செயலாகும்.

அதிமுக தோற்கும்
நாங்குநேரியில் மதநல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கிற வகையிலும், தலித் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications