டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி.. இணையதளம் முடக்கம்! விண்ணப்பதாரர்கள் தவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பிக்க குவிந்ததால் இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது
தற்சமயம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (8-ம் தேதி) கடைசி நாள் ஆகும். 8-ம் தேதி நள்ளிரவு (11.59 மணி) வரை ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். நாளை கடைசி நாள் என்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டு சரிவர இயங்கவில்லை.
இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதனால் பல ஆயிரம் ஏழைபட்டதாரிகள் போட்டி தேர்வுகளில் பங்கு பெற முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications