‘தமிழகச் சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு’... கருணாநிதி தலைமையில் இன்று கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை: தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கடந்த 22ம் தேதி மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க; தென்சென்னை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் இன்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' எனும் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். மேலும், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.