இன்று ஜனநாயகத்தின் கருப்பு நாள் - ஸ்டாலின்
இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். திமுக எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார். இதனையடுத்து பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது. அவரை பிடித்து திமுக எம்எல்ஏக்கள் தள்ளினர். இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களை குண்டு கட்டாக அவைக்காவலர்கள் வெளியேற்றினர். தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை காவலர்கள் இழுத்து சென்றனர் இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
ஸ்டாலினுக்கு சட்டை கிழிந்தது. இந்த நிகழ்வு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும்.
இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பதிவிட்ட உடனேயே சிறிது நேரத்தில் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications