வறண்ட வானிலை..வறுத்தெடுக்கப்போகும் சூரியன்..சென்னைவாசிகள் ரொம்ப உஷாராக இருக்கணும்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 19ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே சூரியன் சுட்டெரித்து ட்ரெயிலர் காட்ட ஆரம்பித்து விட்டது. சாலைகளில் கானல் நீர் ஓடுகிறது. வேலைக்காகவும், அவசிய தேவைகளுக்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள், இளநீர், தர்பூசனி, மற்றும் குளிர்பான கடைகளை நோக்கி குவிகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர், ஈரோடு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகவே பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications