10 டன் மலை வாழைப்பழம் கொண்டு 10,000 பேருக்கு பஞ்சாமிர்தம்... பழனியில் 356 ஆண்டுகால வழக்கம்!
பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி 10 டன் மலை வாழைப்பழங்களைக் கொண்டு பழனி முருகன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த பருவதராஜ குல சமுதாயத்தினர் பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். இது கடந்த 356 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கம் ஆகும்.
அதன்படி, இந்தாண்டு இடைப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் இளநீர், பால், புஷ்பம், சர்க்கரை ஆகியவற்றை காவடிகள் எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்த அவர்கள் இடைப்பாடி, புதுப்பேட்டை, கல்லம் பாளையம், ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், காரைக்கிணறு, தாராபுரம், மானூர் ஆகிய இடங்களில் காவடி பூஜை செய்தனர். இன்று பழனி சண்முகாநதியில் நீராடி மலைக்கோவிலுக்கு வருகின்றனர்.

இந்தப் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பருவதராஜ குல சமுதாய வழிபாட்டு குழுவினர் 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்துள்ளனர்.
இது குறித்து அந்த சமூகத்தின் காவடி பொது கமிட்டி குழு உறுப்பினர் கோகுலதாஸ் கூறுகையில், ‘10 டன் மலை வாழைப்பழம், 3 டன் பேரிச்சை பழம், 750 கிலோ கற்கண்டு, 6 டன் சர்க்கரை, 12 டின் தேன், நெய் மற்றும் 7 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரித்துள்ளோம்.
இன்று இரவு சமுதாய மக்கள் 10 ஆயிரம் குடும்பத்தார் மலைக்கோவிலில் தங்குவர். நாளை அதிகாலை வழிபாட்டிற்கு பின் அனைவருக்கும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து 356-வது ஆண்டாக இதனை நடத்தி வருகிறோம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications