கோவை: மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் உட்பட 5 பேர் கைது – சிக்கியது டைரி
கோவை: நான்கு மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு இயக்கத்தலைவரும் அவரது மனைவி மற்றும் கூட்டாளிகளும் கோவை அருகே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகப் போலீஸார் உதவியுடன் ஆந்திரப் போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய டைரி தற்போது க்யூ பிரிவு போலீசார் கையில் சிக்கியுள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ரூபேஷ் என்பவர் நான்கு மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு இயக்கத் தலைவராவார் உடன் கைதான பெண் அவரது மனைவி ஷினா என தெரியவந்துள்ளது. இவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரன், அனூப் ஆகிய இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், கண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் சற்று பலமாக கால் பதித்துள்ள மாவோயிஸ்ட் இயக்கம், தென் இந்தியாவில் தனது அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ‘பழங்குடியினர் நலனை காக்க, ஆயுதமேந்திய போராட்டம் தான் ஒரே வழி' எனச்சொல்லி, கேரளம், ஆந்திரம், தமிழகம், கர்நாடகாவை மையப்படுத்தி மாவோயிஸ்ட் இயக்கம் தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் தாக்குதல்
ஆயுதமேந்திய விவசாய புரட்சி தான் பழங்குடியினர் நலனை காக்கும் என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் கேரளாவில் உள்ள சொகுசு விடுதிகள், வன அலுவலகம், பன்னாட்டு உணவு விடுதிகள் போன்றவற்றை தாக்குதல் நடத்தியும், எரித்தும் சேதப்படுத்தியது. ஓரிரு இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்ததால், அதிரடிப்படையினர், தேடப்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

4 மாநிலங்களில் தேடுதல்
தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பேக்கரி ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை, ஆந்திர மாநில காவல் துறையினர், தமிழக போலீசார் உதவியுடன் நேற்று மாலை திடீரென கைது செய்தனர்.

கைது ஆபரேசன்
மாலை 4.30 மணியளவில் அவ்வழியாக வந்த பேருந்தில் வந்த அவர்கள் எந்தவித சந்தேகத்துக்கிடமளிக்காத வகையில் சாதாரண உடையில் இருந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பேக்கரியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், ஒரு பேக்கரியின் கதவை அடைத்து மற்றொரு கதவின் வழியாக உள்ளே சென்று அதிரடியாக 5 பேரையும் கைது செய்தனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி
கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் ஜீப்பில் ஏற்றப்படும்போது, ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என கோஷமிட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டீ குடித்துக்கொண்டிருந்தவர்களை போலீசார் அள்ளிச்சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பத்து நிமிடத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர் மட்டும் ஜிந்தாபாத் என்று கத்தியதாக தெரிவித்தார்.

சட்டம் பயின்ற ரூபேஸ்
சட்டம் படித்த ரூபேஸ் மீது 20க்கும் அதிகமான வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரது மனைவி கேரளா மாநில உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 5 பேரையும் போலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்ததாக சொன்ன போலீசார், ஆந்திர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இங்கு கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
விடிய விடிய விசாரணை
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும், கோவை கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் வைத்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக கோவையில் ஆலோசனை நடத்தப்பட்டது, தாக்குதல் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அனைவரும் வாய் திறந்து எந்தவித பதிலும் சொல்லாமல் மெளனம் காத்து வருவதாக கூறப்படுகிறது. பிடிபட்டவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் என்பதால், கோவை கியூ பிராஞ்ச் அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிக்கிய டைரி
இதனிடையே நேற்று மாலையில் ஐவரையும் கைது செய்து கூட்டிச் செல்லும் போது ஒருவர் தன்னுடைய கையில் இருந்த பையை வீசியதாக தெரிகிறது. இதனை போலீசார் யாரும் கவனிக்கவில்லை. அப்போது சாலையோரத்தில் இருந்த ஒருவரின் கையில் சிக்கியது. இதனை பிரித்து பார்த்த போது அதில் சிறிய டைரி ஒன்றும், இரண்டு சிம் கார்டும் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பையை க்யூ பிரிவு போலீசில் அந்த நபர் ஒப்படைத்தார். அந்த டைரியில் உள்ள தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications