தலைமைச் செயலகத்தை எப்படி முற்றுகையிட்டீர்கள்? பெண் போலீசாரிடம் ரகசிய விசாரணை!
தலைமைச் செயலகத்தை எப்படி முற்றுகையிட்டீர்கள், கோரிக்கைகளுக்காக போராடச் சொல்லி உங்களை இயக்குவது யார் என்ற கேள்விகளோடு, கைதாகியுள்ள பெண் போலீசார் சிலரிடம், போலீஸ் உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்ட
சென்னை: கோரிக்கைளுக்காக தலைமைச் செயலகத்தை போலீசாரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதில் சில பெண் போலீசாரும் கலந்து கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 மணி நேர வேலை, மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் ஆர்டர்லி முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காவலர்கள் பெயரில் அண்மைக்காலமாக வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் தகவல்கள் பரவி வந்தன.
கோரிக்கைகளுக்காக போராடுவதற்காக, காவலர் சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெறும்போது, காவலர்களின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவார்கள் என்று சென்னை திருச்சி உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
கண்காணிக்க உத்தரவு
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் காவலர்களின் குடும்பத்தினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடக்கூடும் என்பதால் இன்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் 3 நாட்களுக்கும் காவலர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்க கூடாது என டிஜிபி டிகே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேலும் டிஜிபி உத்தரவை மீறி விடுப்பு எடுப்பவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
திடீர் முற்றுகை
இந்நிலையில், காவலர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு திரண்டு, முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறி உள்ளே நுழைய முயன்றனர். முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமைச் செயலகத்தினுள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ரகசிய விசாரணை
தலைமைச் செயலகத்தில் திரண்ட காவலர்களின் குடும்பத்தினர் வண்டிகளில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண் போலீசாரை மட்டும், வடக்கு கடற்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பு சுவரொட்டி
இதனிடையே, காவலர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரையில் திரள கூடும் என்பதால், அங்கு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உளவுப் பிரிவினரின் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இதையும் மீறி கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் போலீஸாரின் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.