‘சமஸ்கிருதத்தை திணிக்காதே’.. இந்தி பெயர்களை தார் பூசி அழித்து பெ.தி.க போராட்டம்
‘சமஸ்கிருதத்தை திணிக்காதே’ என்று முழக்கமிட்டபடி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தார்.
கோவை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர் பலகைகளில் இந்தியில் எழுத்தப்பட்டுள்ள ஊர் பெயர்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் இந்தியில் உள்ள ஊர் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தினார்கள்.
கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் சேலம் - கொச்சின் புறவழிச்சாலை மைல்கல்களில் உள்ள இந்தி எழுத்துக்களை ராமகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக சென்று தொண்டர்கள் அழித்தனர். அப்போது, மத்திய அரசின் இந்தி மொழியை திணிப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் இந்தி எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினார்கள்.
இதனையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் காவல் துறை தடுப்புகளை தாண்டிச் சென்று இந்தி எழுத்துக்களை அழிக்க முயன்றனர். அப்போது போலீசார் போராட்டக்காரர்களை இழுத்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணை மொழியாக இருக்குமென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழிக்கு மாறாக, மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டயமாக திணித்து வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலத்திட்டங்களில் இந்தியை திணித்து வருவதாகவும் குற்றம்சாட்டிய அவர், இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.