திமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: பாளையில் மைதீன்கான் கொடும்பாவி எரிப்பு
நெல்லை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரும் மே 16 ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. 173 தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மைதீன்கான் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையில் அவரது கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது தொடர்ந்து பாளை தொகுதி டிபிஎம் மைதீன்கானுக்கு கொடுப்பதாக குற்றம்சாட்டினர்.
அதேபோல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எ.பி. நந்தகுமாரை மாற்றம் வேண்டும் என்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வேட்பாளர் டாக்டர் சதீஷை மாற்றக்கோரி கொத்தங்கலம், வடகாடு, அணவயல், மறமடக்கி மற்றும் உள்ளிட்ட இடங்களில் துண்டுபிரசுரங்களை திமுகவினர் விநியோகம் செய்தனர்.