சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்.. நீரூற்று போல பாய்ந்த சிமெண்ட் கலவை.. கடும் டிராபிக் நெரிசல்
சென்னை: சென்னை அண்ணா சாலையில், திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே, வாகன நெரிசலில் சிக்கி விழி பிதுங்கியது.
இன்று காலை சென்னை அண்ணா சாலையில், சர்ச் பார்க் கான்வென்ட் அருகே, திடீரென நடுரோட்டில் பெரிய பள்ளம் உருவானது. அதன் வழியாக சிமெண்டு கலவையும் நீரூற்று போல வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு ஆங்காங்கு வாகனத்தை நிறுத்திவிட்டனர்.
இதனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே, அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து வாகனங்களை ஒரு பக்கமாக அனுமதித்தனர்.
ஒயிட்ஸ் ரோடு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கும், ஜிபி ரோடு, டவர் கிளாக், வியட் க்ரோப்ட் ரோடு, ராயப்பேட்டை ஹை ரோடு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கும் வாகனங்கள் திரும்பி போக போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது.
Sand mixed water gushing out of Metro Train site blocks traffic for hours at Chennai's Anna Salai. @IndiaToday pic.twitter.com/Kc6oZQCb6F
— Pramod Madhav (@madhavpramod1) March 30, 2017
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து பணிகள் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டாலும், சுரங்கம் அமைத்து அதில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறன.
மெட்ரோ பணி காரணமாகவே அண்ணா சாலையிலும் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ பணியாளர்கள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கீழே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் திடீரென இப்படி பள்ளங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதன்பிறகே போக்குவரத்து சீரானது.