ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் களத்தில் குதிக்கும் "டிராபிக்" ராமசாமி.. ஜனவரி 23ம் தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி போட்டியிடப் போகிறார். இதை அவரே அறிவித்துள்ளார்.
இதுவரை நான் நான்கு முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். வருகிற ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் நான் சுயேச்சையாக போட்டியிடப் போகிறேன் என்று கூறியுள்ளார் ராமசாமி. ஜனவரி 23ம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளாராம்.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, பல பொது நல வழக்குகள் போட்டு அரசியல் மட்டத்திலும், பிற மட்டத்திலும் பெரும் புயலைக் கிளப்பியவர் ஆவார். கட்டாய ஹெல்மட் உத்தரவு வரக் காரணமே இவர்தான். அதேபோல ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கொதித்தெழுவார். அதிமுக ஆட்சிக்கு எதிராக இவர் போட்ட வழக்குகள் பல. பெரும்பாலான வழக்குகளில் இவர் வென்றுள்ளார். வக்கீலாக இல்லை என்றாலும் கூட கோர்ட்டுகளில் திறம்பட பேசக் கூடிய திறமை படைத்தவர்.
சென்னை உயர்நீதிமன்றம் இவரது 2வது வீடோ என்று கேட்கும் அளவுக்கு பெரும்பாலான சமயங்களில் அங்குதான் இருப்பார். சமூக நல வழக்குகள் பலவற்றை போட்டுப் போட்டே தேய்ந்து போய் விட்டதோ இவரது உடல் என்று கேட்கும் அளவுக்கு ஒல்லியான தேகத்துடன் காணப்பட்டாலும் இரும்பு இதயத்துடன், உறுதியுடன் தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூகப் போராளி.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் இவரும் போட்டியிட வருவதால், அங்கு நடைபெறும் தேர்தல் விதிமுறைகளுக்கு நிச்சயம் பெரும் ஆப்பாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே தேர்தல் களம் கண்டிப்பாக பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications