மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயன கசிவு - அண்ணா சாலையில் போக்குவரத்து 'ஜாம்'
சென்னை:மெட்ரோ ரயில் பணியின் போது ரசாயனம் வெளியேறியதால் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயனக் கலவை வெளியேறியதால் வியாழக்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு வகையான ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தை கலக்கும் பணி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது. அப்போது மணலுடன் சேர்ந்த ரசாயன நீர் சாலையில் வெளியேறியது.
இதன் காரணமாக அண்ணா சாலை - வாலாஜா சாலை இடையே வாகன நெரிசல் ஏற்பட்டு, 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியேறிய ரசாயன நுரையுடன் மணலும் கலந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அண்ணா சாலையில் போக்குவரத்து சீரானது.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி "திடீரென இத்தகைய ரசாயன நீர் வெளியேறிவிட்டது. இது சுரங்கம் தோண்டுவதற்காக தினமும் பயன்படுத்தப்படுவதுதான். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின், சாலையில் கசிந்த நுரை கலந்த மணல் அப்புறப்படுத்தப்பட்டது. சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட்ட இயந்திரப் பாகங்களும் சரிந்ததால், அப்புறப்படுத்த தாமதம் ஆகிவிட்டது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications