ரேபரேலி ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு! 150 பேர் படுகாயம்!!
ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கு ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பச்ரவண் ரயில் நிலையம் அருகே காலை 9.30 மணியளவில் திடீரென அந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் என்ஜினும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 2 பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த விபத்தில் 38 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதேபோல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் ஒன்று உருக்குலைந்து விட்டது. இந்த விபத்தின் காரணமாக, லக்னோ-வாராணசி வழித்தடத்தில் ரயில் சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.