கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு
கூவாகம் விழாவின் தேரோட்டத்தில் பல திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர்.
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு கண் திறத்தல் நடைபெற்றது. இதில் மும்பை, தில்லி, புனே, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.

திருநங்கைகள் புதிய பட்டு சேலை, தங்க நகைகள், கவரிங் நகைகள், கை நிறைய வளையல்கள் அணிந்து, தலை நிறைய பூ வைத்து மணப்பெண் போன்று தங்களை அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது கோயில் பூசாரிகள் கைகளால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர். திருமணமான மகிழ்ச்சியை கும்மி அடித்தும், ஆடிப்பாடியும் விடிய விடிய கும்மியடித்து கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருநங்கைகள் அரவாணுக்கு தாலி கட்டும் நிகழ்வைத் தொடர்ந்து இன்று அரவாண் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அரவாண் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு பலியிடப்படுவார்.












Click it and Unblock the Notifications