அதிமுகவில் எம்.எல்.ஏ சீட்... போயஸ் கார்டனில் விண்ணப்பம் கொடுத்த திருநங்கை சுதா
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு திருநங்கை சுதா இன்று போயஸ் கார்டனுக்கு சென்று மனு அளித்துள்ளார். ஊர்வலமாக சென்ற திருநங்கைகள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் சட்டசபைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று பல்வேறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருநங்கைகள், தங்கள் சார்பாக சுதா என்ற திருநங்கையை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
சுயேட்சையாக போட்டியிட வேண்டாம் என முடிவு எடுத்துள்ள அவர்கள், அதிமுகவில் தங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை, திருநங்கை சுதா தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், ஊர்வலமாக போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர்.
முதல்வரின் இல்லத்திற்குள் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் நான்கு பேர் உள்ளே சென்று முதல்வரின் உதவியாளரிடம் தங்கள் விருப்ப மனுவை அளித்தனர். பின்னர் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அங்கு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சுதா, எங்களி்ன் உரிமையைதான் நாங்கள் கேட்டுள்ளோம். அம்மா சீட் தருவார்கள் என்று நம்புகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளின் எதிர்பார்ப்புதான் இது என்று கூறியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற்போது அதிலிருந்து விலகிவிட்ட நிலையில், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் போட்டியிட பாரதி கண்ணம்மாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

திருநங்கை தேவிக்கு சென்னையில் போட்டியிட சீமான் வாய்ப்பு அளித்திருக்கிறார். திருநங்கை ராதிகாவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருக்கிறது. திருநங்கை சுதா அதிமுகவில் வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளார். தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்ட திருநங்கைகளை அரசியல் கட்சிகள் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருப்பது காலத்துக்கு தேவையான நல்ல மாற்றம் என்கிறார் பாரதி கண்ணம்மா.












Click it and Unblock the Notifications