ஐ மாதிரி கேவலமான படத்துக்கு எப்படி சென்சார் சான்று கொடுத்தீங்க?- திருநங்கைகள் ஆவேசம்
சமூகத்தில் ஒரு அங்கமாகத் திகழும் திருநங்கைகளை மிகக் கேவலமாக சித்தரிக்கும் ஐ படத்துக்கு எப்படி தணிக்கைச் சான்றிதழ் தரலாம்.. அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருநங்கைகள் இன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரே ஆவேச போராட்டம் நடத்தினர்.
ஷங்கரின் ஐ படத்தில் வரும் திருநங்கை பாத்திரம் தங்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி திருநங்கைகள் சமூகம் கொதிப்படைந்துள்ளது.

இந்தப் படத்துக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் ஷங்கர் வீட்டு முன் சில தினங்களுக்கு முன் போராட்டம் நடத்தி திருநங்கைகள் இன்று, சென்னையில் உள்ள தணிக்கை குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநங்கைகள் டாக்டர் செல்வி, எஞ்ஜினியர் பானு ஆகியோர் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். ஏராளமான திருநங்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சமூகத்தில் ஒரு அங்கமாகிவிட்ட, மெல்ல மெல்ல அங்கீகாரம் பெற்றுவரும் திருநங்கைகளை இந்த அளவு கேவலப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஐ படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் தரலாம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் பிராந்திய தணிக்கைத் துறை அலுவலர் பக்கிரிசாமியைச் சந்தித்து தங்கள் எதிர்ப்பையும், படத்துக்கு தடை கோரும் மனுவையும் அளித்தனர்.












Click it and Unblock the Notifications