ஈரோட்டில் போக்குவரத்துறை அதிகாரி மனைவியுடன் தற்கொலை
ஈரோடு: மகனுக்கு நோய் தாக்கியதால் அதை தாங்கமுடியாமல் அரசு அதிகாரி ஒருவர் மனைவியுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மூலப்பாளையம் வாய்க்கால் மேடு ஈ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). அரசு போக்குவரத்து கழக உதவி என்ஜினீயர். இவரது மனைவி சண்முக வடிவு (38). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நீண்டநாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதியருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வருண் என்று பெயரிட்ட அவர்கள் கடந்த சரஸ்வதி பூஜை அன்று ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய மகன் திடீரென வாந்தி எடுத்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தலையில் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மூளையில் கேன்சர் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த ஒரே மகனுக்கு கேன்சர் என்று அறிந்து பாலசுப்பிரமணியும், சண்முகவடிவும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் எத்தனை லட்சம் செலவு செய்தாவது மகனை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நோய் தீரவில்லை. மகனின் சாவு நம் கண்முன்பு நடப்பதற்கு முன்பு இந்த உலகத்தை விட்டு நாம் சென்றுவிட வேண்டும் என முடிவு செய்து திங்களன்று காலை ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினர்.
நேராக காளியங்கராயன் வாய்க்காலுக்கு சென்றனர். அங்கு இருவரும் விஷமாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வாய்க்காலில் குதித்தனர். வெளியே செல்வதாக கூறிச்சென்ற மகளும், மருமகனும் ஆஸ்பத்திரிக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த சண்முக வடிவின் தந்தை ராமசாமி உறவினர்களிடம் தெரிவித்தார்.
உறவினர்கள் அவர்களை தேடிபார்த்தனர். அப்போது வெண்டிபாளையம் பகுதியில் வாய்க்கால் கரையோரம் பாலசுப்பிரமணியின் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வண்டியின் அருகில் மாத்திரை கவர், செருப்புகள் கிடந்தன. இதை வைத்து அவர்கள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என உறுதி செய்தனர்.
இதையடுத்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பாலசுப்பிரமணி, சண்முக வடிவு உடலை தேடி பார்த்தனர். ஆனால் வெகு தொலைவில் நேற்று இரவு கொடுமுடி அருகே பச்சாபாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பாலசுப்பிரமணி உடல் மட்டும் மீட்கப்பட்டது.
சண்முக வடிவின் உடலை நேற்று விடிய, விடிய தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இன்று காலை முதல் கொடுமுடி தீயணைப்பு துறையினர் மற்றும் மலையம்பாளையம் போலீசார் தேடுதல் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
உடலை தேடுவதற்காக காளிங்கராயன் அணை கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மகன் வருணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications