கோவை, வேலூர், திருச்சி, கரூர் உள்பட பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தம்.. மக்கள் கடும் பாதிப்பு
கோவை, வேலூர், நீலகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து கோவை, வேலூர், நீலகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் இன்றே தொடங்கினர்.

அதனை தொடர்ந்து திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலுக்கு பிறகே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வெளியூர் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடந்து அரியலூர் 50 க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் டெப்போக்குள் நிறுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இயக்கப்படாமல் பணிமனைக்கு திருப்பிவிடபட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
தாராபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர், குளித்தலையிலும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோவை, வேலூர், நீலகிரி, திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் நாளை தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications