கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் 15 நாள் உயிரோடு இருக்க வாய்ப்பு- மருத்துவ கல்வி இயக்குனர்
சென்னை: போரூர் கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்கள் 15 நாட்கள் வரை உயிரோடு இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனியன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதில், போரூர் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில், அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையாக மீட்புப் பணிகள் முடிவடையாததால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையே கட்டிட இடிபாடு நடந்த இடத்தில் துர்நாற்றம் எழுவதால் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.
மீட்புப் பணி தொடர்ந்து 4-வது நாளாக நடந்து வரும் நிலையில் உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை மீட்க சாதுர்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடிந்து விழுந்த கான்கிரீட் தூண்கள், சிலாப்கள், மேற்கூரைகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினரும், டாக்டர்கள் குழுவினரும் போராடி வருகிறார்கள்.
மீட்பு பணியில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சுகாதாரப் பணிகள் இயக்குனர் தலைமையில் 30 டாக்டர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து நடந்து 72 மணி நேரம் (3 நாட்கள்) முடிந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா? அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா? என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
15 நாட்கள்...
ஒரு மனிதன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஆகாரம் உட்கொள்ளாமல் 15 நாட்கள் வரை உயிரோடு இருக்கலாம். அவரது உடல் வலிமை, மன தைரியத்தை பொறுத்து இது அமைந்துள்ளது.
மயக்க நிலை...
எதுவும் சாப்பிடாமல் ஒரு வாரம் வரை கட்டாயம் இருக்க முடியும். அதற்கு மேலாக அவரது சிறுநீரகம் பாதிக்கக்கூடும். சிறுநீரகம் பாதித்தாலும் அவர் உயிருடன் இருக்க முடியும். உடலில் நீர்சத்து குறைந்து விடுவதால் மயக்கமான நிலையில் காணப்படுவார்.
முதல்வர் உறுதி...
அந்த அடிப்படையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் ஊழியர்களை உயிரோடு மீட்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
மீட்புப் பணி நிதானம்...
அதனால் மீட்பு பணியில் விவேகமாக செயல்பட வேண்டியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பவர்கள் மீது கான்கிரீட் துண்டுகள் விழுந்து அழுக்கி விடக்கூடாது என்பதற்காக மீட்பு பணிகள் நிதானமாக நடக்கின்றன.
காற்றுக் குழாய்...
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக காற்று குழாய் மூலம் முதலுதவி அளிக்கப்படுகிறது. இருதயத்தை அமுக்கி அதன் செயலாக்கி டாக்டர்கள் உறுதி செய்தனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.