பூசாரி தற்கொலை: ஓபிஎஸ் தம்பி மீதான வழக்கில் இன்று முதல் சாட்சிகளிடம் விசாரணை- விரைவில் தீர்ப்பு!
திண்டுக்கல்: கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா மீது தொடரப்பட்ட வழக்கில் 22 சாட்சிகளிடம் இன்று முதல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் இன்று முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கோயில் பூசாரி நாகமுத்து 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கும் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர்மன்றத் தலைவரான ஓ. ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார்.

புகாரை போலீசார் பெற மறுத்த நிலையில், என் தற்கொலைக்கு ராஜாவும், அவரது ஆதரவாளர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நாகமுத்துவை ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் வி.எம்.பாண்டி, சிவக்குமார், மணிமாறன், ஞானம், லோகு, சரவணன் ஆகிய 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ. ராஜாவின் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக இருப்பதால், அரசு வழக்கறிஞர் வாதிடக் கூடாது என தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞருக்குப் பதிலாக ஈரோட்டைச் சேர்ந்த பவானி மோகனை சிறப்பு வழக்கறிஞராக உயர்நீதிமன்ற மதுரை கிளை நியமித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஓ.ராஜா, பாண்டி உள்ளிட்ட 7 பேரும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா முன் ஆஜராகினர். அப்போது சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பவானி மோகனும் ஆஜரானார்.
இந்த வழக்கில் தொடர்பான தகவல்களை படிப்பதற்கு கால அவகாசம் கேட்ட சிறப்பு வழக்கறிஞர் பவானி மோகனின் கோரிக்கையை நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். இந்த வழக்கை தொடர்ச்சியாக நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மார்ச் 15-ந் தேதி (இன்று முதல்) அரசுத் தரப்பு சாட்சிகளிடம் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும்.
எனவே இந்த வழக்கில் தொடர்புடைய 22 சாட்சிகளும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
ஏற்கனவே அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் ஜெயலலிதா முழுவதுமாக ஓரம்கட்டி வைத்துள்ள நிலையில் அவரது தம்பி மீதான தற்கொலைக்குத் தூண்டிய வழக்கின் விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications