கைக்குழந்தைகளுடன் பிச்சை... திருச்சியில் 7 பெண்கள் கைது - வாடகைக் குழந்தைகளா என போலீஸ் விசாரணை
திருச்சி: திருச்சியில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த 7 பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். அக்குழந்தைகள் வாடகைக்கு எடுக்கப் பட்டவையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியின் புறநகர் பகுதியிலிருந்து குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து, சில பெண்கள் நகரின் முக்கியமானப் பகுதிகளில் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கைக்குழந்தைகளை அழவைத்து, அதைக் காட்டி பொதுமக்களிடம் பணம் பெறுவது அப்பெண்களின் திட்டம் ஆகும்.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் சில பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சி ஆட்கடத்தல் தடுப்பிப் பிரிவு போலீசார் 4 கைக்குழந்தைகளுடன் 7 பெண்களைக் கைது செய்தனர்.
பிச்சையெடுக்க கொண்டு வரப்பட்ட குழந்தைகள் அப்பெண்கள் உடையது தானா அல்லது வாடகைக்கு எடுக்கப் பட்டதா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.